Sunday, May 7, 2017

சர்வதேச வெறுங்காலோட்ட தினம்.

சர்வதேச வெறுங்காலோட்ட தினம்.
(International Barefoot Running Day)

அன்று: 1960கள்.

அது ஒரு குக்கிராமம். சுமார் 40 குடும்பங்கள் வசித்த ஊர். அப்போது மொத்தமே 144 வாக்காளர்கள்தான். அப்போதெல்லாம் ஊருக்குள் யாரும் காலணிகள் அணியும் வழக்கமில்லை. கிராமம் மொத்தமும் பெரும்பாலும் விவசாய குடும்பங்களே. விவசாய வேலைக்கும் சரி, பிற வெளி வேலைகளுக்கும் சரி காலணிகள் அணியும் வழக்கமில்லை, அணிந்து கொண்டு வேலை செய்யவும் முடியாது.

உள்ளூரிலேயே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இருந்தது. இப்பவும் இருக்கிறது. ஐந்தாம் வகுப்பு வரை படிக்கலாம். அதன்பின் சுமார் 3கிமீ தொலைவில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி. அவைகளில் படிக்கச் சென்றபோதும் யாருக்கும் காலணிகள் பற்றியெல்லாம் பெரியதாய் ஆர்வமில்லை, தேவையுமில்லை.

 உயர் நிலைப்பள்ளியில் மேற்படிப்புக்கு ஆறாம் வகுப்பில் சேர்ந்து மூன்று கிலோமீட்டர்கள் தினமும் முதலில் நடந்து சென்றதும், பின்னர் சைக்கிளில் சென்றதும், வெறுங்கால்களில்தான். ஆனால் பின்னர் உயர் நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாகி ப்ளஸ் 1 & ப்ளஸ் 2 வகுப்புகள் வந்தன. அவ்வகுப்புகளுக்கு சீருடையாக மாணவர்கள் பேண்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.  பேண்ட் அணிந்து வெறுங்கால்களில் செல்வது ஒருமாதிரி இருக்கும் என்பதால் காலணிகள் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 'பள்ளிக்கூடம் போறதே வெட்டிவேலை, அதுக்கு அய்யாவுக்கு செருப்பு வேற வேணுமா?' என்ற காலகட்டம் அது.  வாரச் சந்தையில் வாங்கப்படும் விலை மலிவான ரப்பர் செருப்புகள்தான் பெற்றோர்களால் அரை மனதோடு வாங்கித்தரப்பட்டன. அவர்களை குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில், செருப்பணிவதெல்லாம் ஊரின் பெரிய குடும்பங்களுக்கே ஆடம்பரம் அப்போது.

அதன் பின் 80களில் கல்லூரி கால கட்டத்தில், அணியும் காலணிகளை வைத்து அணிபவரின் கௌரவம் நிர்ணயிக்கப்பட்டதால், ரப்பர் செருப்புகளில் இருந்து வழக்கமான செருப்புகளுக்கு மாற வேண்டி வந்தது. அப்புறம் மேல் படிப்பு, பின் தொழிலுக்காக என்று ஷூ அணியும் வழக்கமும் வந்தது. ஆனாலும் ஒரு ஜோடி செருப்பு மற்றும் ஒரு ஜோடி ஷூ என்ற அளவிலேயே இருந்து வந்தது.

இன்று: 2010கள்.

இப்போது 2010களில் க்ளோஸ்டு ஷூ ரேக்கில்,  மலையோட்டங்களுக்கு உதவும் களெஞ்சி ட்ரெய்ல் ஷூ, சாலை ஓட்டங்களுக்கென இத்தாலியன் லோட்டோ ஷூ, தொழில்முறை உபயோகத்திற்கென 2 ஜோடி லெதர் ஷூக்கள், எல்லா வித ஓட்டங்களுக்கும் அணியும் வகையில் புதிதாக பிரபலமாக தொடங்கியிருக்கும் லுனா சாண்டல்ஸ், விஷேசங்களில் அணிய பிரத்யேக செருப்பு, சாதாரண உபயோகங்களுக்கென பூமா ஸ்லிப்பர்ஸ் என பல்வேறு வகை காலணிகள் பல்வேறு வகை உபயோகத்திற்கென இருப்பில் உள்ளன.

வாழ்க்கை ஒரு வட்டங்கிறதென்னவோ உண்மைதான். வெறுங்கால்களில் ஆரம்பித்த வாழ்க்கை எல்லா காலணி வகைகளையும் பார்த்து, அனுபவித்து, ஒரு முழு வட்டம் சுற்றிவிட்டு இப்போது மீண்டும் வெறுங்கால்களில் வந்தே நிற்கிறது.

ஆமாம், இன்று சர்வதேச வெறுங்காலோட்ட தினம். ஓட்டங்களில் பங்கு கொள்வோர் வெறுங்கால்களில் ஓடுவது தற்போது அதிகரித்து வருகிறது. அதை ஊக்கப்படுத்தும் விதமாக இன்று எலியட்ஸ் பீச்சில் 5கிமீ விழிப்புணர்வு வெறுங்காலோட்டம் நடைபெற்றது.

வீட்டுக்குள்ளும் செருப்பணியும் நிலைக்கு வந்து விட்ட நாம் காலணிகளை உதறிவிட்டு வெறுங்கால்களில் நடப்பதால் கிடைக்கும் நன்மைகளையும் சுகத்தையும் திரும்பப் பெற வேண்டும்.  அவ்வப்போதாவது வீட்டை சுற்றி வெறுங்கால்களில் நடக்க வேண்டும். சாலைகள் சுத்தமாக இல்லை என்பதையும் ஆணி போன்ற பொருட்கள் கால்களை பதம் பார்க்கும் என்பதையும் நினைவிலிருத்தி கவனமாக நடக்க வேண்டும். பெரிய கோவில்களுக்கு இதற்காகவே சென்று அவற்றின் பெரும் பிரகாரங்களில் வெறுங்கால்களில் நடக்க வேண்டும்.

வெறுங்கால்களில் எங்கு நடந்தாலும், ஓடினாலும், அந்த அனுபவமே அலாதியானது.  அதை அனுபவிப்போம்.

உடன் நண்பர்கள் Palaniappan Adv Annamalai,  Mohan Kumar(போட்டோ உதவி),  Moorthy Kandasamy.

No comments: